ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புதிய கட்டளை
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினிகாந்தின் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்படும்.
1996 தேர்தலில் தி.மு.க. த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போதுஅந்த அணி அமோக வெற்றி பெற்றது. அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார் இதில் அ.தி.மு.க. வென்றது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் ரசிகர்களை இறக்கி எதிராக வேலை பார்த்தார். அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டார். ரஜினி எதிர்ப்பை மீறி பா.ம.க. வென்றது.
தற்போது நடைபெறும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணா மூலம் தெளிவுபடுத்தினார். அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினருக்கும் இது சுற்றறிக்கையாக அனுப் பப்பட்டுள்ளது. விரும்பும் கட்சிகளுக்கு ரசிகர்கள் ஓட்டு போடலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்துரசிகர்கள் விரும்பும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்துள்ளனர். ஒவ்வொரு ரசிகரும் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் எல்லா வேட்பாளர்களின் வண்டிக்கு பின்னாலும் ரஜினி மன்ற கொடியுடன் ஆட்டோக்கள் பறக்கின்றன. ரஜினி படங்களும் எடுத்து செல்லப்படுகிறது.
இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புதிய கட்டளை பிறப்பித்துள்ளார். பிரசாரத்தில் ரசிகர்கள் ரஜினி மன்ற கொடிகளை பயன்படுத்தக் கூடாது. ரஜினிகாந்த் உருவ படங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மீறி கொடிகளை பயன்படுத்தினால் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சத்தியநாராயணா மூலம் இந்த உத்தரவு அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

